கனவுகளின் பரமபத பாதைகள்

கடல் எனக்கு எப்போதும் பிரியமான ஒன்றாகவே இருந்திருக்கிறது டாக்டர். இப்போது போல எப்போதும் பயம் பீடித்து அலைந்ததில்லை.


நேற்றிரவும் அந்தக் கனவு மறுபடியும் வந்ததா?


அதே கனவா என்பது புரியவில்லை. ஆனால் அதே போன்றதொரு மஞ்சள் வாத்தை பார்த்தேன். கடல் ரத்தம் போல என் மீது சொட்டிக்கொண்டே இருக்கிறது. நான் நகராமல் நிற்கிறேன். வாத்தின் உருவம் பெரிதாகிக் கொண்டே இருந்தது.

நான் அழ ஆரம்பித்து விட்டேன். இசை கேட்கிறீர்களா என டாக்டர் கேட்டார். சரி என்றேன். பழைய கிராமபோனில்  கேட்பது பிடிக்கும் என இரண்டு அமர்வுகளுக்கு முன் சொல்லி இருந்தேன். ஹங்கேரிய இசைத் துணுக்கை காற்றில் நழுவ விட்டார். கனவுகளாலும் தூக்கமின்மையாலும் அவதிப்பட்டு வந்ததால் ஆலோசனை கேட்பதற்காக வந்தபோது சாதாரண பிரச்சனையாகத் தான் தோன்றியது. பத்து அமர்வுகளுக்கு பின்னும் கோளம் கோளமாக கனவுகள் சுழன்று சுழன்று பிளவுபட்டு பிரச்சனையின் மையத்தை தேடுவதே பெரும்பாடாக போய்விட்டது. அதன் ஆழம் இருண்மையாகி விட்டது. வேர் பிடிபடவே இல்லை. எல்லா கனவுகளுமே நமது இச்சையின் வெளிப்பாடுகளாக இருக்க வேண்டிய அவசியம் அநேகமாக இல்லை என்று முதல் அமர்வின் போது டாக்டர் விவரித்திருந்தார்.

கனவு என்பது ஒரு மறைப்பு உத்தி தான். அதை ஆராய்வதன் மூலம் அறிவது என்பது அதற்கப்பாலான தன்னிலையையும் தன்னிலைகளுக்கும் சமூகங்களுக்கும் அஞ்சும் குற்றங்களை  நிகழ்த்துவதாகவும் உள்ளது. ஆனால் அவை மட்டுமே கனவுகளாகி விடாது. உங்களுக்கு வாசிக்கும் பழக்கம் உள்ளதா?

இல்லை

நான் சிலவற்றை பரிந்துரைக்கிறேன். உங்களது பிரச்சனை என்ன என்பது உங்களுக்கே தெளிவாக தெரிய வேண்டும் என்றில்லை. ஆனால் நீங்கள் அச்சம் கொள்ளக் கூடாது. இந்த புத்தகங்கள் உங்களது குழப்பத்தை போக்கவும் அடிப்படைகளை அறிந்து கொள்ளவும் உதவக் கூடும். அடுத்த அமர்வை இரண்டு வாரங்கள் கழித்து வைத்துக் கொள்ளலாம். மனதுக்கு இதமானதை ஒரு பயிற்சியாக்கி பழகுங்கள். சரி செய்து விடலாம்.

மனதுக்கு பிடித்தது என்றவுடன் எனக்கு கடலும் பறவைகளும் தான் நினைவுக்கு வந்தன. தினமும் கடலை வெறுமனே உட்கார்ந்து கொண்டு ரசிக்க ஆரம்பித்தேன். ரம்மியமாகத் தான் இருந்தது. ஆனால் அன்றைய இனிமை மூன்று மாதங்களுக்குப் பிறகு சிக்கல்களின் முடிச்சை மேலும் இறுக்கி விட்டது. டாக்டர் பரிந்துரைத்த புத்தகங்களின் கதாபாத்திரங்களும் உரையாடல்களும் என் கனவுகளில் வரவே இல்லை. நான் அறிந்திராத தேசத்தின் மீதான படையெடுப்புகள் - விடிந்த பின் அந்நிலத்தின் குரூர வாசனை தான் என்னைச் சுற்றி நான் நுகர்வது போன்ற எண்ணங்கள் அதீத ரத்தத் தீற்றல்களுடன் என்னை பீதி கொள்ளச் செய்தன. ஒரே கனவை பலமுறை கனவுகளில் அடுத்தடுத்த நாட்களிலோ அதே இரவில் அடுத்தடுத்த கனவுகளிலோ கண்டேன். குழந்தைகள் பூங்காவில் இருவர் உறவு கொள்வதை பார்த்து குழந்தைகள் இருவர் அதை முயற்சி செய்வதை நான் மறைந்திருந்து பார்ப்பது போல், மாமிச வெறி என்னுள் வளர்ந்து மனிதர்களை உண்பது போல், உடல் முழுதும் மூடப்பட்டு முதுகு காட்டி நிற்கும் பெண்ணின் முகம் கருப்பு என நான் யூகிப்பது போல், சாலையில் விழுந்த ஒற்றை மலரை மின்னல் தாக்கி ஆனால் நான் கருகுவது போல், அடர்ந்த ஒளிக் கற்றைகள் என்னை ஏந்தி அகண்ட பால் வீதியில் வீசுவது போல்.

உங்களது குழந்தைகள் நீங்களும் உங்கள் மனைவியும் உறவு கொள்வதை பார்த்து விடுவார்களோ என்ற பயம் அப்படி கனவாக உருமாறி வந்திருக்கலாம்.

நேற்றைய கனவில் நிலம் தட்டையாக அல்லாது செங்குத்தாக நிற்க நான் என்னை இழுத்து செல்லும் ஒரு நாயுடன் நடந்து போய் கொண்டிருந்தேன். நட்சத்திரங்களை விழுங்கும் கோபுரங்கள் மீதிருந்து நூற்றுக்கணக்கான நாய்கள் என்னுடைய நாயை குதர வருகின்றன. அப்போது அந்த நாய் என்னை தனது பின்னங் காலால் சுட்டிக் காட்டி நான்தான் இவனை இழுத்துச் செல்கிறேன், இவனை தாக்குங்கள் என்கிறது. அவை அத்தனையும் என் மீது பாய நான் சிரித்துக் கொண்டு தானிருக்கிறேன். இதற்கு என்ன அர்த்தம்? நாய்கள் மீது எனக்கு பிரியமும் இல்லை வெறுப்பும் இல்லையே, அவை என்னுடைய தசைகள் அத்தனையையும் பிய்த்து தின்கின்றன. இதோ இந்த வலது கணுக்கால் தசையை விட்டுவிட்டீர்கள். அதையும் மீதம் வைக்காமல் எனக்கு மோட்சம் தாருங்கள் என்று அவற்றிடம் நான் இறைஞ்சுகிறேன். ஆனால் அவை என்னை அதன் பின் சீண்டக் கூட இல்லை. நான் கதறிக் கதறி அழுகிறேன்.


டாக்டர் பரிவுடன் என் தோளை அழுத்தினார். அதற்குப் பிறகு அடுத்தடுத்த அமர்வுகளில் சூழலை மகிழ்ச்சியாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார். நான் காணும் கனவுகளை தினமும் எழுதி வைக்கச் சொன்னார். ஒரு மனிதனுக்கு ஓரிரவில் பதின்மூன்று கனவுகள் வந்தால் அதிகம் என்றார். எனக்கு இருபத்தி எட்டு. அவை அத்தனையையும் நான் நினைவில் வைத்திருந்தது தான் டாக்டரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்தனையும் அல்ல, நினைவில் நின்றது மட்டும் இத்தனை என்றேன். எனக்கு வரும் கனவுகளின் மையச் சரடை கோர்க்க எவ்வளவோ முயன்றும் நூல் நழுவிக் கொண்டே இருந்தது. அவற்றின் சில பொதுவான அம்சங்கள் என டாக்டர் யூகித்திருந்தவை அதன் பிறகு எட்டிப் பார்க்கவே இல்லை. பரிச்சயமல்லாத அசட்டுத் துரத்தல்கள் கூட ஆசுவாசம் அளித்தன. நான் பார்க்கும் கேட்கும் சிந்திக்கும் எண்ணங்கள் கனவுகளில் வீரியத்துடன் உக்கிரம் கொள்ள ஆரம்பித்தவுடன் உயிர் நடுங்க ஆரம்பித்துவிட்டது. எனக்குப் பிடிக்கும் விஷயங்கள், நான் செய்யும் அன்றாட வேலைகள் - பழக்க வழக்கங்கள் இரவில் தூக்கத்தில் துக்ககரமான படமாக ஓடுவது சகித்துக் கொள்ளமுடியாததாகியது.


பொதுவாக கனவுகள் மங்கலாகத் தான் நினைவிலிருக்கும். நீங்கள் இத்தனை துல்லியமாக விவரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார். கனவுகள் மூளையின் முக்கிய செயல்பாடுகள். மூளைகளின் இடைவெளிகள் கனவுகளாலேயே நிரப்பப்படுகின்றன. சிக்கல் யாதெனில் ஒரே கனவில் நிகழ்காலத்திலும் ஒளிக் காலத்திலும் பயணிக்கும் பிம்பங்களை ஒரே கணத்தில் குறுக்கும் நெடுக்குமாக பல காலங்கள் முன்னும் பின்னும் தொடர்கின்றன. அதாவது போர்ஹே சொல்வது போல கனவு நிகழ் வெளியிலும்  நினைவின் பதிவு உள்ளேயும் ஒரே கணத்தில் நிகழும்.

அதாவது டாக்டர், ஒரே அணு நேர் சக்தியாகவும் எதிர் சக்தியாகவும் செயல்படுவது போல என்கிறீர்களா?

ஆம். ஒரே கணத்தில் பல கனவுகள், அவற்றை  எதிர்க்கும் உங்கள் மனது, அந்த எதிர்ப்பினால் உண்டான பிம்பங்களின் இணைக் கனவுகள், கனவை விமர்சிக்கும் கனவுகள், அதை இவை இப்படியில்லை என மறுப்பு கூறும் கனவுகள் என பல பிசாசுகள் பின்னிப் பிணைந்து செயல்படும். நாம் அவற்றை பயிற்சியின் மூலமாக விழிப்புடன் எதிர் வினையாற்றாமல் கவனிக்க மட்டுமே முடியும். கனவுகளை வெறுமனே கவனிக்கப் பழகிய பிறகு அவற்றை தவிர்க்கவும் முடியும்.

கனவுகளை தவிர்ப்பதற்கான வகுப்புகள் எனக்கு தொடங்கப்பட்டன. என் மருத்துவரின் மருத்துவ நண்பர் என் மூளையின் இட வலது திசுக்களை இணைக்கும் பாலங்களை ஆராய்ந்தார். அவை பிளவுபட்டிருப்பது என் அதீத கனவுலகங்களின் சிருஷ்டியை நிர்மாணிப்பதாக இருந்தன. பிளவின் பால் படைப்பு. நான் சிக்கலான கேள்விகள் கேட்பதை தவிர்க்கச் சொன்னார்கள். 1, 2, 6, 12, 28, 44 வாரங்களுக்குப் பிறகு நான் கனவுகளின் தொல்லையின்றி நிம்மதியாக உறங்கினேன்.


எனக்கு உண்டான மன உளைச்சல்களுக்கு தனியாக சிகிச்சை பெற்றேன். நல்ல இசையும் இயற்கையும் நூல்களும் சூழலும் உடலையும் மனதையும் பாதிக்காது என்பதை என் ஆழ் மனம் விரும்பி ஏற்று உவகை கொள்ளச் செய்தது. சிகிச்சை முடிந்த பின் சில வாரங்களுக்கு நான் பின்பற்றுவதெற்கென கால அட்டவணை ஒன்றை தயார் செய்து அளித்திருந்தார்கள். காலை 4.30 - 6.00 மணி வரை தியானம் மற்றும் சில யோகா பயிற்சிகள். 6.00- 6.30 மனதை அதிரச் செய்யாத மெல்லிய இசை கேட்க வேண்டும். பின்பு தினசரி அலுவல்கள். மாலை 5.00 மணிக்கு நடை பயிற்சி. 5.30க்கு ஆன்மீக/ தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களை வாசித்தல். நேற்று விட்ட பத்தியில் இருந்து வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டு பத்திகள் வாசித்த நிலையில் ஆச்சரியமாக வரிகள் நகர ஆரம்பித்தன. நூலில் இருந்து தாவி குதித்து முப்பரிமாணம் கொண்டன. அவை குறுக்கும் நெடுக்குமாக உலவத் தொடங்கின. வரிகள் வார்த்தைகளாக பின் எழுத்துகளாக பிரிந்தன. என்னை தாக்கத் தொடங்கின.

காந்தியின் புகைப்படம்


"என் மன உறுதியை நான் இழக்க மாட்டேன்.   அவர்களால்          அதிபட்சமாக என்ன செய்ய முடியும்?  என்னைக் கொல்லலாம்.      அவ்வளவே"
                                                                                                                                             - மகாத்மா காந்தி.

பேச்சு எங்கெங்கோ திசை மாறி காந்தியில் 'ல்' மேல் உள்ள முற்றுபுள்ளியின்  மேல் மையம் கொண்டது. "காந்தி நம்ம ராமகிருஷ்ண வித்யாலயத்துக்கு வந்திருக்கார் தெரியுமா?" என கேட்டார் என் தந்தை. காந்தி இந்தியா முழுக்க சுற்றியிருக்கிறார் என்றாலும் என் வீட்டிலிருந்து நடந்தால் ஐந்து நிமிட தொலைவில் உள்ள இடத்திருக்கு அவர் வருகை தந்திருக்கிறார் என்பதை அறிய ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. "அப்படியா?" என்றேன். "பின்ன, ஆபீஸ் எதுக்கவே போட்டோ மாட்டியிருக்காங்க.நீ கவனிக்கலையா? இந்த வித்யாலத்த தொறந்து வச்சதே அவர்தான்" என்றார்.பள்ளிக் காலங்களில் ராமகிருஷ்ணா வித்யாலயா சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒரு முறை, "இந்தியா உண்மையிலேயே சுதந்திரம் அடைந்துவிட்டதா?" என்பது தலைப்பு. தலைப்பில் 'உண்மையிலேயே' என்ற வார்த்தையை முக்கியமானதாக கருதி எதிர்மறையாக பேசினேன். ஆனால் நேர்மறையாக பேசிய மூவருக்கே பரிசு வழங்கப்பட்டது. அந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் மொத்தமே மூன்றுபேர் தான் இந்தியா உண்மையிலேயே சுதந்திரம் அடைந்துவிட்டது என சத்தியம் செய்தார்கள். மதிப்பெண்கள்  வழங்கிய மூவருள் ஒருவர் இறுதியாக "அதெப்படி சுதந்திரம் கிடைக்கலன்னு பேசலாம்? காந்தி அதுக்காகத் தான போராடினார்? உசுரையும் விட்டாரு? என்னால சுதந்திரம் கிடைக்கலங்கறத ஏத்துக்க முடியாது" என்றார்.

எனக்கு அந்த புகைப்படத்தை உடனே பார்க்க வேண்டும் என பரபரத்தது. காவலாளி 'யார பாக்கணும்? எனக் கேட்டார். 'காந்தியின் புகைப்படத்தை' என்று சொல்ல கூச்சமாக இருந்தது.'பள்ளி ஆசிரியர் ஒருவரைப் பார்க்க ' என பொய் சொல்லி உள்ளே நுழைந்தேன்.அப்போது தான் பள்ளி, ஆசிரமம், தொழில்நுட்பக் கல்லூரி என பலதும் ஒரே கூரையின் கீழ் இங்கு இயக்கப்படுகிறது என்பது ஞாபகம் வந்தது. எந்த அலுவலகத்தில் என தெரியாமல் தேடவும் முடியாது. முதலில் பள்ளியிலுள்ள  அலுவலகத்தில் பார்க்கலாம் என முடிவு செய்தேன்.பள்ளி தலைமை ஆசிரியரின் அலுவலக வரவேற்பறையின் முன் மாட்டப்பட்டிருந்தது! காந்தி வெற்றுடம்பில்தான் இருந்தார். கண்ணாடி அணிந்திருக்கவில்லை. கம்பீரமும் அல்லாத தளர்வும் அல்லாத நிமிர்வில் நின்றிருந்தார்.காந்திக்கு வலப்புறம் கைகளை மரியாதை நிமித்தமாக தன் மணிக்கட்டில் கோர்த்திருந்தவர் திரு.அவினாசிலிங்கம் என படச் சட்டகத்தின் கீழிருந்த குறிப்பு மூலம் அறிய முடிந்தது.கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம். ஆனால் வித்யாலயத்தின் தொடக்க விழாவுக்கு  காந்தி வந்ததாக அதில் குறிப்பேதும் இல்லை.

'ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்' நூலை ஜெயகாந்தன் காந்தியவாதிகளுக்கும் மார்க்சசியவாதிகளுக்கும் சமர்ப்பணம் செய்திருப்பார். பின்னவர்களுக்கு தன் நூலை ஜெயகாந்தன் அர்ப்பணம் செய்ததை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. சமூக அநீதிகளுக்கு எதிரான பெருங்கோபம் கொண்ட மனிதராகவே அப்போது அவரை அறிந்திருந்தேன். அதனால் பதின் வயதில் காந்தியவாதிகளுக்கு ஜெயகாந்தன் ஆதரவானவர் என்பதை அறியவே ஆச்சரியமாக இருந்தது. பிறகுதான் அவர் எழுதிய 'ஈஸ்வர அல்லா தேரே நாம்' வாசித்தேன். அன்றிலிருந்து இன்றுவரை காந்தியை பற்றி அறிந்து கொள்வதில் சலிப்பேதும் ஏற்படவில்லை. இந்திய தலைவர்களில் எவரையும் ஒரு சராசரி இந்தியன் அறியாமல் வாழ்ந்து மடியலாம்.ஆனால் காந்தியை, நேர்மறையாகவோ/எதிர்மறையாகவோ, அறிந்து கொள்ளாமல் இருக்கவே முடியாது என்றே தோன்றுகிறது. இனிவரும் காலங்களில் கூட காந்தியை கடந்துதான் நம் அடுத்தடுத்த தலைமுறைகளின் பயணம் நிகழும். 

புகைப்படத்தை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தேன். அவரது புன்னகை மேலும் விரிவடைவது போலிருந்தது.இந்த மனிதரையா சுட்டுக் கொன்றான்? திடீரென்று அந்த சந்தேகம் கிளர்ந்தெழுந்தது. காந்தியின் மார்பை துளைத்த மதவெறிக்கு ஆதரவான துப்பாக்கி குண்டு என்னானது? மார்பை துளைத்தவுடன் உடம்பில் இருந்து வெளியேறிவிட்டதா? அல்லது இப்போதும் நம்மை பீடித்திருக்கும் மதம் போல அவரது உடம்பிலேயே தங்கி விட்டதா? அது அவரது உடம்பில் இருந்து நீக்கப்பட்டதா? நீக்கப்பட்டதெனில் அது தற்போது பாதுகாக்கப்படுகிறதா? காந்தியின் உடம்போடு சேர்த்து அதுவும் எரிக்கப்பட்டதா? என்னானது அத்தோட்டா ?

'என்ன சார்?' என்ற குரல் கேட்டு திரும்பினேன். கேட்டவர் தலைமையாசிரியராக இருக்க வேண்டும். எளிமையாக இருந்தார். ஃபிரேம் கண்ணாடிக்குப் பின் ஒளிந்திருந்த சின்ன கண்கள்.  எங்கோ புறப்பட்டவர் போலிருந்தது. 'என்னைப் பாக்க வந்தீங்களா? என்ன வேணும்?' என்றார். நான் தயங்கி, "இல்ல சார். காந்தியோட இந்தப் படத்தை பாக்க வந்தேன்" என்றேன். அந்தப் படத்தை பார்த்தார். சரி என்பதுபோல தலையாட்டிவிட்டு சென்றார். என்னைக் கடக்கும் போது அவர் புன்னகைத்தது போல தான் இருந்தது.


காந்தி இன்று தளத்தில் 

Followers

Total Pageviews

தமிழ்ப் புள்ளி

About this blog

கோகுல் பிரசாத். Powered by Blogger.