நேரம்

I Steal from every movie ever made என்ற இயக்குனர் Quentin Tarantino வின் வாசகங்களோடு தொடங்கும் இத்திரைப்படம் காலையில் தொடங்கி மாலை ஐந்து மணிவரை நடக்கும் கதை. இயக்குனர் அல்போன்சோ புத்திரனுக்கு க்வான்டின் டரண்டினொ என்றால் அவ்வளவு இஷ்டம் போல. Pulp Fiction படத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஓரிடத்தில் மையம் கொள்ளும் யுக்தி, ஒரு பரபரப்பான கட்டத்தை நோக்கி மிக நிதானமாக அடியெடுத்து வைக்கும் காட்சிகள், தடதடத்து அடங்கும் வேகம், Inglorious Basterds படத்தின் நீண்ட இருபது நிமிட உரையாடல்களுக்கு பின் வெடிக்கும் சண்டை என பல காட்சிகள் நினைவில் வந்து மோதுகின்றன. Inspiration என்பதற்கும் Plagiarism என்பதற்கும் வித்தியாசம் தெரிந்தும் தெரியாதது போல நடிக்கும் சிலபல இயக்குனர்கள் இந்த படத்தை ஒரு முறை பார்க்கட்டும்.
தங்கை திருமணத்திற்காக 'டெர்ரர்' பேர்வழியான வட்டி ராஜாவிடம் கடன் வாங்கும் கதாநாயகனுக்கு வேலை பறிபோவதால் அசலையும் வட்டியையும் திருப்பி செலுத்த முடியவில்லை. மாலை ஐந்து மணி வரை கெடு. இந்த இக்கட்டான நிலைமையில் வீட்டை விட்டு வெளியேறும் காதலி - அதை கடத்தல் என தன் மீது காவல்துறையில் புகார் கொடுக்கும் வருங்கால மாமனார் . நண்பன் கொடுத்த பணமும் திருடு போக அதன் பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே மீதிக் கதை.

படத்தின் இசையும் ஒளிப்பதிவும் வசீகரம் கலந்த ஆச்சரியம். மொட்டை மாடியில் அதிகாலை வெளிச்சம், மழை சூழ் மேகம், துரத்தல் காட்சிகள் என உறுத்தாத வெளிச்சத்தில் அதே சமயம் படத்திலிருந்து தனியாக துருத்திக் கொண்டுமிராமல் ஆனந்த் சந்திரனின் ஒளிப்பதிவு அப்ளாஸ் அள்ளுகிறது. ராஜேஷின் பாடல்களை விட பின்னணி இசை மிரட்டல் ரகம். எத்தனையோ காட்சிகளுக்கு அற்புதமாக இசையமைத்து விட்டு கடைசி சேஸிங் காட்சிக்கு மட்டும் ஏன் பாஸ் 'சுட்டி'ருக்கீங்க?
                                                           

நஸ்ரியா நசீம் நடிப்பதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவே. நிவினும் படத்தின் டெரர் வில்லனான சிம்ஹாவும் அட்டகாசம். மற்ற துணைக் கதாபாத்திரங்கள் அனைவரும் இயல்பாக நடித்திருக்க தம்பி ராமையாவின் மிகை நடிப்பு அனாவசியம். ஏன் அநியாயத்துக்கு டென்ஷன் ஆகுறீங்க? மொதல்ல ஷோல்டர ஏறக்குங்க.

உலக சினிமாவின் பிரபல இயக்குனர்களையும் அவர்களது படங்களையும் படத்திலேயே பட்டியலிடுவது, 'அமெரிக்காவுல ஒருத்தன் பாம் போட்டா இங்க எனக்கு வேலை போயுடுச்சு' என படத்தின் மிகப்பெரும் பலமான திரைக்கதையில் ஆங்காங்கே சுவாரசியங்கள் பளிச்சிட்டாலும்  'அடுத்து இதான் அடுத்து இதான்' என சுலபமாக யூகிக்க வைக்கும் சில காட்சிகளை தவிர்த்திருந்தால் 'நேரம்' இன்னும் நன்றாக இருந்திருக்கும். இடைவெளிக்கு பிறகு கொஞ்ச நேரம் ஏன் கதை நொண்டி அடிக்கிறதோ? ஆரம்ப காட்சிகளில் நம்மில் புன்னகையை தோன்றச் செய்யும் வசனங்கள் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங்.

படத்தில் ஏகப்பட்ட குறைகள் இருப்பினும் ஒரு புது இயக்குனர் தனது முதல் படத்தில் அதைக் கையாண்ட விதம் நிச்சயம் பாராட்டத்தக்கது. ஏகப்பட்ட குப்பைகளுக்கு நடுவே மின்னும் ஒரு வைர மோதிரம். அதை கையில் அணிந்து அழகு பார்க்க வேண்டியதுதான்.


                                                              Platonic Meter : 2 / 5
                                       
                                                     Watch it for its Fresh Treatment!

சாதி-வர்ணம்-முக்குணங்கள்


அன்புள்ள ஜெயமோகன்,

பிறரிடம் கேள்விகள் கேட்கும்போது அவை அசட்டுத்தனமானவையாக அமைந்துவிட்டால் சபையில் அசடு வழிய நேரிடுமோ என்ற பெரும் தயக்கத்துடனேயே எப்போதும் என் சந்தேகங்களை முன்வைக்கிறேன்.இக்கடிதமும் அப்படியே.

நம் மரபில் மனிதர்களைப் பொதுவாக அன்பு – குரூரம்-இவை இரண்டையும் சம அளவில் கொண்டவர்கள்(தேவர்-மானுடர்-ராக்ஷசர்?) என மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள்.குறிப்பாக மகாபாரதக் கதாப்பாத்திரங்கள். ஆனால் மகாபாரதத்தில் சாதிப் பிரிவினை பற்றித் தெளிவான சித்திரம் இல்லை என்றே எண்ணுகிறேன். நமது மரபு குணத்தின் அடிப்படையில் மனிதனை வேறுபடுத்த முனைந்தது சாதிப் பிரிவினைக்கு முன்பா? அதற்குப் பிறகா? இவ்விரண்டும் கலந்தே இருந்தபோது (இருந்திருக்குமானால்?) தொழிலை மட்டும் அளவுகோலாகக் கருதாமல் குணத்தையும் ஒரு பொது அம்சமாக கருதி மக்களைக் குழுக்களாகப் பிரித்தார்களா? (இன்ன இன்ன கடமைகளை ஒழுக்கங்களைப் பயின்று வாழ்பவனே பிராமணன் என புத்தரில் ஆரம்பித்து ஜெயகாந்தன் வரை பலர் குறிப்பிட்டு இருக்கிறார்கள்) குணமே பிரதானமாகக் கருதப்பட்டதெனில் கூட்டு வாழ்க்கையும் தொழிலும் சாதியினால் விளைந்த நற்பயன்களும் குணப் பிரிவினையை மறக்கடிக்கச் செய்துவிட்டனவா? தயவு செய்து தெளிவுபடுத்தவும்.

அன்புடன்
கோகுல்பிரசாத்

அன்புள்ள கோகுல்,

நீங்கள் இவ்விஷயத்தைப்பற்றி இந்த வினாவுடன் இருக்கையில் இதுசார்ந்து கிடைக்கும் தகவல்களை இன்னும் கொஞ்சம் வாசித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் சாதிப்பிரிவினை, குணப்பிரிவினை போன்றவற்றைப் பலவகையில் கலந்துகொள்கிறீர்கள். உங்கள் கேள்வி ஒட்டுமொத்தமாகவே ஒரு பெருங்குழப்பம்.

இந்தியசிந்தனையில் வர்ணம் சார்ந்த ஒரு பிரிவினை தொல்பழங்காலம் முதல் காணப்படுகிறது. வர்ணத்திலிருந்து சாதிமுறை உருவானது என்பது ஆரம்பம் முதலே இந்தியவியலாளர்களான ஆய்வாளர்கள் அடைந்த தவறான புரிதல். அவர்கள் ஆராய ஆரம்பித்தபோது இரண்டும் ஒன்றாகக் கலந்து பிரிக்கமுடியாதவையாகவே இருந்தன என்பதுதான் காரணம்.

வர்ணப்பிரிவினை என்பது ஒரு கொள்கையடிப்படையிலான பகுப்பு. வர்ணம் என்ற சொல்லுக்கு நிறம் என்று பொருள். தொடக்கத்தில் அந்த நேர்ப்பொருளிலேயே இந்தப் பகுப்பு ஆரம்பித்திருக்கலாம். பின்னர் அது shades என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவதற்கு நிகரான பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது. ஒருபோதும் நேரடியாகத் தோல்நிறத்தை அது சுட்டவில்லை.

வர்ணப்பகுப்பு இயற்கையின் இயல்பு மனித இயல்பு பற்றிய ஒரு கொள்கையின் விரிவாக்கம். இயற்கையானது நேர்சக்தி, எதிர்சக்தி, சமநிலைச்சக்தி என்ற மூன்று விசைகளால் ஆனது எனப் புரிந்துகொண்டதிலிருந்து உருவானது அந்தக்கொள்கை. நேர்ச்சக்தி என்பது மனிதர்களின் இயற்கையில் வெளிப்படுவதை ரஜோகுணம் என்றார்கள். எதிர்சக்தி தமோகுணம். சமநிலைச்சக்தி சத்வகுணம். இப்படி மனிதர்களில் வெளிப்படும் மூன்றுகுணங்களின் அடிப்படையில் நால்வர்ணம் வகுக்கப்பட்டது. தமோகுணம் கொண்டவர்கள் சூத்திரர்கள். ரஜோகுணம் கொண்டவர்கள் சத்ரியர்கள். தமோகுணமும் ரஜோகுணமும் கலந்தவர்கள் வைசியர். சத்வகுணம் கொண்டவர்கள் பிராமணர்கள் என்று பிரிக்கப்பட்டது.

குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படும் நால்வருணம் என்ற அமைப்பு இந்தியசிந்தனைமுறையில் ஒரு நிரந்தரமான சட்டகமாகவே இருந்துள்ளது. மனிதர்களை மட்டுமல்ல மிருகங்களையும் தாவரங்களையும்கூட அப்படிப் பிரித்துப்பார்த்திருக்கிறார்கள். பிங்களசந்தஸ் சாஸ்திரம் போன்றவற்றில் அப்படிப்பட்ட விரிவான பிரிவினைகளைக் காணலாம். இது ஒரு புராதனமான மரபு. இயற்கையை அறியவும் பயன்படுத்திக்கொள்ளவும் அன்றிருந்தோர் கையாண்ட ஒரு முறை, அவ்வளவுதான்

இது ஒரு தத்துவார்த்தமான பகுப்பாக இருந்ததே ஒழிய எங்கும் எப்போதும் இதனடிப்படையில் சமூகம் நிரந்தரமாகப் பிரிக்கப்படவில்லை. அது நடைமுறைச்சாத்தியமும் இல்லை. உதாரணமாக சத்ரியர் என்ற சாதியே இந்தியாவில் இல்லை. சூத்திரர் என்ற சாதியில் எவர் மண்ணைவெல்ல முடிகிறதோ அவர்களே ஆட்சியாளர்களாக ஆனார்கள். மகாபாரதத்தின் சத்ரிய வம்சம் பெரும்பாலும் சூத்ரசாதியிடமிருந்தே உதயமாகிறது. தன்னை சத்ரியனல்ல என்று சொல்லி அவமதிக்கும் சிசுபாலனைக் கொல்வதற்குமுன் கிருஷ்ணன் அதைச் சொல்கிறான், மண்ணாள்பவனே சத்ரியன் என்று.

வர்ணப் பிரிவினையின் அடிப்படையில் நூல்களில் இவர்களுக்கான தொழில்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இதுவும் கொள்கையடிப்படையில்தான், நடைமுறையில் அல்ல. உதாரணமாக இந்தியவரலாற்றில் ஒருதருணத்திலும் பிராமணச் சாதியினர் பிராமணர்களுக்கு என வர்ணாசிரமம் ஒதுக்கிய பணிகளை மட்டும் செய்ததில்லை. மகாபாரத காலம் முதலே அவர்கள் போர்செய்திருக்கிறார்கள்.நாடாண்டிருக்கிறார்கள். மிகச்சமீபகாலத்தில் நாயக்கர் ஆட்சியின்போதுகூட நியோகிபிராமணர்களே போர்த்தளபதிகளாக இருந்திருக்கிறார்கள்.ஆக இந்த வர்ணாசிரமப் பிரிவினையும் அதன் அடிப்படையிலான கடமைகளும் நெறிகளும் எல்லாமே ஒருவகையான கொள்கைகளே ஒழிய யதார்த்தங்கள் அல்ல.

சாதி என்பது முற்றிலும் வேறான ஒன்று. அது இந்தியாவின் ஆயிரக்கணக்கான பழங்குடிக்குலங்கள் நிலப்பிரபுத்துவ அடுக்குக்குள் கொண்டுவரப்பட்டபோது உருவான அதிகார அடுக்கின் விளைவாகப் பிறந்துவந்தது. நிலத்தைவென்று அதிகாரத்தை அடைந்த குலங்கள் மேல்சாதியாகவும் அவர்களால் ஆதிக்கம் செய்யப்பட்டவை கீழ்சாதிகளாகவும் உருவாயின. மிகமெல்ல பலநூற்றாண்டுகளாக நிகழ்ந்துவந்த இந்த செயல்பாடு இன்றும் தொடர்கிறது. சென்ற நூறுவருடங்களுக்குள் பல பழங்குடிக்குலங்கள் சாதிய அடுக்குக்குள் வந்திருப்பதைக் காணலாம்.

ஆகவே சாதிப்படிநிலை என்பது நிலையானது அல்ல. நிலத்தைவெல்லும்சாதி அப்படிநிலையில் மேலே செல்வதும் நிலத்தை இழக்கும் சாதி கீழே வருவதும் சாதாரணம். பல அடித்தள சாதிகள் பேரரசுகளை உருவாக்கி ஆளும்வர்க்கமாக மாறி நூற்றாண்டுகளாக ஆட்சிசெய்திருக்கின்றன.

இப்படிச் சொல்லலாம். சாதி கீழிருந்து உருவாகி வந்தது. வர்ணாசிரமம் மேலிருந்து உருவாக்கப்பட்டது. சாதிகளை மேலிருந்து புரிந்துகொள்ளவும் வகுக்கவும் முற்பட்டவர்கள் அவற்றை வர்ணாசிரமத்தின் சட்டகத்திற்குள் அடைக்க முயன்றார்கள். அது ஒரு அதிகாரச்செயல்பாடு. சமூகத்தைப் பிரித்து அடுக்கி ஒவ்வொருவருக்கும் அதிகார அமைப்பில் ஓர் இடத்தை வகுத்தளிக்கும் முயற்சி

அதன்விளைவாகப் பூசாரிக்குலங்கள் எல்லாமே பிராமணர் என்ற வர்ணத்துக்குள் சென்றனர். இந்தியாவில் பிராமணர் என்ற அடையாளத்துக்குள் முற்றிலும் வேறுபட்ட பல்வேறு சாதிகள் இருப்பது இதனால்தான். இந்த நிகழ்வை சமீபகால உதாரணமாகப்பார்க்கவேண்டுமென்றால் வீரசைவ மரபில் வீரசைவ பூசைக்காக பசவரால் உருவாக்கப்பட்ட பிரிவினர் சில தலைமுறைக்குள் வீரசைவ பிராமணர்களாக மாறியதைச் சுட்டிக்காட்டலாம். வணிகம் செய்த சாதிகள் வைசிய வர்ணத்துக்குள் செலுத்தப்பட்டன. நாடாண்ட சாதிகள் ஷத்ரியர்களாக அடையாளம்காணப்பட்டன. உதாரணமாக, மாடுமேய்க்கும் யாதவர்கள் பேரரசை உருவாக்கியபோது ஷத்ரியர்களாக ஆனார்கள்.இவ்வாறுதான் சாதியும் வர்ணமும் ஒன்றாகக் கலந்துகுழம்ப ஆரம்பித்தன.

ஆனால் இவ்வாறு வர்ணத்தின் சட்டகத்திற்குள் சாதிகளை அடைக்கும்போக்கு ஒருபோதும் முழுமையாக நிகழ்ந்ததில்லை. சாதிகள் மாறிக்கொண்டே இருந்தன. ஒருசாதி, தான்செய்யும் தொழிலோ தன்னுடைய அதிகாரமோ மேம்படும்போது வர்ணாசிரம அமைப்பில் மேம்பட்ட இடத்தைக்கோரியது. அதை மெதுவாகப் போராடி அடையவும்செய்தது. ஷத்ரிய வைசிய அடையாளங்களுக்காக சூத்திரர் என வகுக்கப்பட்ட சாதிகள் போராடுவதை இன்றும்கூடக் காணலாம்.

சாதியை இனக்குழுக்கள் உருமாறி உருவாகிவந்த அமைப்பு என்றும் வர்ணத்தை அந்தச்சாதிகளை அதிகாரவர்க்கம் தொகுப்பதற்காக பயன்படுத்திய அமைப்பு என்றும் புரிந்துகொள்வது தெளிவைத்தரும்.

இதேபோன்ற வேறுபல பிரிவுகள் புராணங்களில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. பொதுவாக அனைத்திலுமே இந்த முக்குணங்கள் என்ற அளவுகோல் இருப்பதைக் காணலாம். தேவர்கள் சத்வகுணம் கொண்டவர்கள், அசுரர் தமோகுணம் கொண்டவர்கள், மனிதர்கள் ராஜஸகுணம் கொண்டவர்கள் என்ற பிரிவினையை சிலபுராணங்களில் காணலாம். . கதகளிபோன்ற கலைகளில் கதைமாந்தர் இவ்வாறு பிரிக்கப்பட்டு அதற்கேற்ப அவர்களின் முகங்களின் நிறங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. தமோகுணம் கொண்ட கதைமாந்தர் கரியவேடம். ரஜோகுணம் கொண்டவர்களுக்கு சிவப்பு. சத்வகுணத்துக்கு பச்சை. சில சிகிழ்ச்சைமுறைகளில் இப்பிரிவினை நோய்களுக்குக்கூட செய்யப்படுகிறது
இவற்றையெல்லாம் ஒன்றோடொன்று குழப்பிக்கொண்டு சிந்திப்பது வீண்வேலை. இவற்றுக்கான வரலாற்றுப்பின்புலத்தைப் புரிந்துகொண்டு இவை எவ்வாறு செயல்பட்டன என்று புரிந்துகொள்வதே ஒரு நவீனமனம் செய்யவேண்டியது.

முக்குணங்கள் என்ற பிரிவினை இந்தியசிந்தனையின் தத்துவம், மருத்துவம், யோகம் ஆகியவற்றைப்புரிந்துகொள்ளப் பயன்படக்கூடிய ஒன்று.அதைக் குறியீட்டுரீதியாக விளக்கிக்கொள்வதுதான் பயன்தரும்

ஜெ

The Host

                                 

Science Fiction / Fantasy கதைகளில் பெரிய விருப்பம் இருந்ததில்லை. 2001 A Space Odyssey விதிவிலக்கு. 2006 ஆம் ஆண்டு வெளியான இத்தென் கொரிய திரைப்படம் Memories Of Murder படத்தை இயக்கியவரின் அடுத்த படைப்பு. தென் கொரியாவிலிருந்து அமெரிக்காவிற்கு எதிரான மனநிலையில் உருவானது இப்படம் என்பது கவனிக்கத்தக்கது. உலகின் சர்வாதிகாரியை ஒரு ராட்சச விலங்காக (Monster) சித்தரித்து அதன் பிடியில் சிக்கித் தவிக்கும் தனது நாட்டின் பலவீனத்தையும் அதனால் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களையும் அரசியல் நையாண்டிகளை (Political Satire) அள்ளித் தெளித்து விவரிக்கும் அறிவியல் புனைகதை இப்படம்.                  

தென் கொரியாவில் வாழும் ஓர் அமெரிக்க விஞ்ஞானி தனது கொரிய உதவியாளரிடம் விஷத் தன்மை வாய்ந்த அமிலத்தை ஹான் நதியில் கொட்டச் சொல்கிறார். இருநூறு பாட்டில்கள் கொட்டப்படுகின்றன. ஆறு ஆண்டுகளில் அவை ஒரு ராட்சச விலங்காக உருக்கொள்கின்றன. அந்நகரத்து மக்களை தாக்குகிறது-விழுங்குகிறது .ஹான் நதிக் கரையோரம் உணவகம் நடத்தி வரும் காங் டூவின் மகளையும் இன்னும் சிலரையும் சிறை பிடித்துச் செல்கிறது. அதைத் தாக்க முற்பட்ட ஓர் அமெரிக்க ராணுவ அதிகாரியின் (தென் கொரியாவில் அமெரிக்க ராணுவம்!) கை துண்டிக்கப்படுகிறது. காங் டூவின் முகத்தில் அதன் ரத்தம் தெறிக்கிறது. இந்நிலையில் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட அந்த ராணுவ வீரர் மர்மமான வைரஸ் தாக்கி உயிரிழந்ததாக அமெரிக்க அரசாங்கம் அறிவிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் இதே போல சார்ஸ் முதலிய உயிர்க்கொல்லி நோய்கள் பரவியதாகவும் இம்முறையாவது தென் கொரியா விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
                                  

மக்களிடயே பெரும் பீதி பரவுகிறது. அனைவரும் கையுறைகள் காலுறைகள் மாஸ்குகள் அணிந்தே நடமாடுகிறார்கள். ஹான் நதிக்கரையோர மக்கள் அனைவரும் மருத்துவமனையில் பரிசோதனைக்காக வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். காங் டூவின் முகத்தில் அதன் ரத்தம் பட்டிருப்பதால் அவனுக்கு பிரத்யேக அறை ஒதுக்கப்படுகிறது. அமெரிக்க அதிகாரிக்கு  இருந்த அதே ஆரம்பகட்ட வைரஸ் அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த சமயத்தில் காங் டூவின் மகள் தனது அலைபேசியில் இருந்து தான் உயிரோடிருப்பதாக தகவல் அனுப்புகிறாள். மருத்துவர்களும் உயரதிகாரிகளும் வைரஸ் பாதிப்பினால் காங் டூ உளறுவதாக எண்ணி அவனை நம்ப மறுக்கிறார்கள். ஆகையால் மகளைக் காப்பாற்ற காங் டூவின்  தந்தையும் தம்பி தங்கையும் மருத்துவமனையில் இருந்து தப்பிக்கிறார்கள்.

காங் டூவிற்கு தொடர்ந்து பரிசோதனைகள் நடைபெறுகின்றன. வலி பொறுக்க முடியாமல் கதறி மயக்கமடைகிறான்.அவனுக்கு சிகிச்சை அளிக்கும் அமெரிக்க மருத்துவர் நெற்றிப்பொட்டில் தான் அக்கிருமி குடியிருக்கும் என்றும் ஆதலால் மண்டையை பிளந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கூறுகிறார். ஆனால் ரத்த மாதிரிகள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. அது குறித்து உதவி கொரிய மருத்துவர் வினவுகையில் அப்படியொரு வைரஸ் இல்லையென்றும் அமெரிக்க ராணுவ அதிகாரி அவனுக்கு ஏற்கனவே இருந்த ரகசிய நோயால் தான் மரணமடைந்தான் என்றும் அமெரிக்க மருத்துவர் கூறுகிறார். இவர்களது உரையாடலை கவனிக்கும் காங் டூ தாதி ஒருத்தியை பணயமாக வைத்து மருத்துவமனையில் இருந்து தப்பிப்பதாக எண்ணி பரிசோதனைக் கூடத்தை விட்டு வெளியேறுகிறான். அது வெட்டவெளியாகவும் சுற்றிலும் அமெரிக்க வீரர்கள் இருப்பதைக் கண்டும் அதிர்ச்சியடைகிறான். அமெரிக்காவின் மாய வலையில் இருந்து தப்பித்தானா? அவனது குடும்பம் என்னானது? மகள் காப்பாற்றப்பட்டாளா? என்பது மீதிக் கதை.

கொரிய அமெரிக்க அரசாங்கங்களை கேலி செய்யும் ஒவ்வொரு காட்சியும் அட்டகாசம். மழை நாளில் இல்லாத வைரஸ் ஒன்றிற்காக எல்லோரும் தத்தம் நாசிகளை மறைத்திருக்க பேருந்து நிலையத்தில் ஒருவன் இருமுகிறான். சுற்றி நிற்பவர்கள் அஞ்சி விலக இருமியவன் ஓடிக்கொண்டிருக்கும் மழை நீரில் எச்சில் துப்புகிறான். ஒரு வாகனம் அந்த நீரை எல்லார் மீதும் வாரி இறைத்து விட்டு ஓடும் காட்சி ஓர் உதாரணம். புதிதாக வைரஸ் எதுவும் பரவவில்லை என தெளிந்து காங் டூ அமர்ந்திருக்கையில் செய்தியில் அமெரிக்க அதிபர் வைரசை கட்டுப்படுத்த கொரிய அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டுவது, கொரிய ராணுவம் அந்த விலங்கை நதிக்குள் இறங்கி வேட்டையாடாமல் வெறுமனே கரையை சுற்றி வருவது என நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம்.

படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மையோடு உருவாக்கப்பட்டிருக்கின்றன. அம்பு விடுதல் போட்டியில் காட்டும் அதே நிதானத்தை மருத்துவமனையில் இருந்து தப்பிக்கும் போதும் கடைபிடிப்பது, அத்தனை சிரமங்கள் துக்கங்களுக்கிடையேயும் காங் டூ உறங்கிவிடுவது போன்ற காட்சிகள் நாம் ரசித்து மகிழவேண்டியவை. பின்னணி இசையின் மிரட்டல் இயக்குனரின் முந்தய படமான Memories of Murder ஆங்காங்கே நினைவூட்டினாலும் நம் இதயத் துடிப்பை எகிறச் செய்யும் துள்ளலை பாராட்டாமல் இருக்க முடியாது.

படத்தின் முக்கியமான அம்சம் அந்த ராட்சச விலங்கின் உருவம். இதுவரை வந்திருக்கும் விசித்திர உருவங்களின் சாயலை பெரும்பாலும் கவனமாக தவிர்த்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு அதற்கு பெரிதும் உதவியிருக்கிறது. சின்னச் சின்ன திருப்பங்கள் மூலம் அதி நுட்பமாக கையாளப்பட்டிருக்கும் இப்படம் ஒரு நல்ல பொழுதுபோக்குச் சித்திரம்.

படத்தை தரவிறக்கம் செய்ய 
The Host
                                    
                                    Platonic Meter : 4 / 5

                                                    
                                                                    A Blast!

Followers

Follow by Email

Google+ Badge

Total Pageviews

Google+ Followers

தமிழ்ப் புள்ளி

Share It

About this blog

கோகுல் பிரசாத். Powered by Blogger.